கோவில்பட்டி: பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டுக்குள் நிச்சயமாக நல வாரியம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது:
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வெற்றிடங்களை அவர்கள்தான் நிறைவு செய்ய முடியும். அவர்களுக்குப் பின்னர் கட்சியில் வெற்றிடம் இல்லாமல் இருப்பதால்தான் ஆட்சி முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் வெற்றிடம் இல்லாமல் ஆட்சியையும், கட்சியையும் மட்டுமல்லாமல் தமிழகத்தையே வழிநடத்தி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுமைமிக்க அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை.
திரையரங்குகளில் முன்பு திரைப்படம் திரையிடுவதற்கு முன் திருக்குறள் ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதுபோல், திரைப்படங்களின் தலைப்புக்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் வெளியிடுவதற்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கப் பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்படும்.
பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன. வாரியம் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டுக்குள் நிச்சயமாக வாரியம் அமைக்கப்படும் என்றார் அமைச்சர் கடம்பூர்செ.ராஜு.