சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவது குறித்தும், ஆழ்துளைக் கிணறுகள் வரைமுறைபடுத்துதல் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது பயணத்தை முடித்துக்கொண்டு திங்கள்கிழமை சென்னை திரும்புகிறார். எனவே, துணை முதல்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.