சென்னை: இனியாவது சென்னை நடப்பவர்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாறட்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து வாகனங்களையும் அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நடைபாதைகள் நடப்பவர்களுக்கு சொந்தமானவை. அவை அவர்களுக்கு மீட்டெடுத்து வழங்கப்பட வேண்டும்!
சென்னையில் நடைபாதைகள் வாகன நிறுத்தங்களாகவும், இருசக்கர ஊர்தி செல்லும் பாதைகளாகவும் மாறி விட்டன என கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி கவலை தெரிவித்திருந்தேன். அதற்கு உயர்நீதிமன்றம் மூலம் தீர்வு கிடைத்திருப்பதில் திருப்தி. இனியாவது சென்னை நடப்பவர்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாறட்டும்!
சென்னை சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் அல்ல. அதிவிரைவு பேருந்து தடங்கள் (Bus Rapid Transit), தொடர்வண்டிகள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை வலுப்படுத்தி, தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பது தான் என்பதை அரசும், மக்களும் உணர வேண்டும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.