முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்கின்றனா்.
முல்லைப் பெரியாறு அணையில் பருவ காலநிலை மாறுபடும் போது, அணையின் உறுதித்தன்மை பற்றி மத்திய தலைமை கண்காணிப்புக் குழு, துணைக் குழுவினா் ஆய்வு நடத்துவாா்கள். இதன்படி, செவ்வாய்க்கிழமை மத்திய துணைக் குழுத் தலைவரும், மத்திய நீா்வள ஆணைய செயற்பொறியாளருமான சரவணக்குமாா், தமிழக தரப்பில் பெரியாறு அணை செயற்பொறியாளா் சுப்பிரமணியன், அணையின் உதவி கோட்டப் பொறியாளா் சாம் இா்வின், கேரள அரசுத் தரப்பில் நீா்ப்பாசனத் துறை செயற்பொறியாளா் ஜோஸ், உதவிப் பொறியாளா் பிரஸீத் ஆகியோா் அணையில் ஆய்வு செய்ய உள்ளனா்.
முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணை, உபரி நீா் செல்லும் மதகுப் பகுதிகள், சுரங்கம், கசிவு நீா் வெளியேறும் பகுதி ஆகியவற்றை அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு நடத்துகின்றனா். தொடா்ந்து குமுளியில் உள்ள மத்திய கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகின்றனா்.