அரசுப் பள்ளியில் படித்த மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு செங்கோட்டையனின் ஒரு கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் படித்து உன்னத நிலைக்கு உயர்ந்துள்ள முன்னாள் மாணவர்களுக்கும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளது.
minister Sengottaiyan
minister Sengottaiyan

அரசுப் பள்ளிகளில் படித்து உன்னத நிலைக்கு உயர்ந்துள்ள முன்னாள் மாணவர்களுக்கும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 

மாணவர்களின் பள்ளிக் கல்வி இடைநிற்றலைத் தடுத்து அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக தமிழக அரசு மாணவர்களுக்கு 14 வகையான பொருட்களை விலையில்லாமல் வழங்கியதால் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

2019-20 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக ரூ. 28,757.62 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து சாதனைப் படைத்து வருகிறது.

அரசு அதிக அளவில் நிதிகளை ஒதுக்கினாலும், இது என் பள்ளி, அதன் வளர்ச்சியில் நானும் பங்கெடுப்பதில் பெருமை கொள்கிறேன் என்ற எண்ணம் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் இதயத்தில் உருவானால் தான் அரசுப் பள்ளிகளின் தரத்தினை மேன்மேலும் உயர்த்தி அரசுப் பள்ளிகளை மெருகூட்டிட வழிவகை செய்திடும்.

இதன்தொடர்ச்சியாக, 5-11-2019 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் (https://contribute.tnschools.gov.in) ஒன்றினை துவக்கி வைத்துள்ளார்கள்.
 
எனவே, அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தற்போது தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் (NGO) தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வாருங்கள் என்று இருகரம்கூப்பி அழைக்கின்றேன்.

2018-2019 ஆம் ஆண்டு எனது அழைப்பினை ஏற்று பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் 519 அரசுப் பள்ளிகளில் ரூ. 58 கோடி மதிப்பில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டமைக்கு எனது கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு உயர்நிலைப் பள்ளியில் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் சிறிய அளவிலான பழுதடைந்துள்ள டேபிள், சேர், ஆய்வுக்கூடப் பொருட்கள், எலெக்ட்ரிக் பொருட்கள் போன்றவைகளை மாற்றியமைக்கவும், பழுதுநீக்கவும் அந்தந்த பகுதியிலுள்ள பொதுமக்களும், பெற்றோர் ஆசிரியர் கழகங்களும், தலைமை ஆசிரியர் மூலம் மேற்கொள்ளலாம். இதுபோன்ற செயல்களினால் பொருள்கள் விரையமாகாமல் மாணவர்கள் பயன்பெறுவார்கள். மேலும், அரசுப் பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்துதர விரும்பும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கும், உரிய அனுமதியை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டுமென்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள விரும்பும் நல்ல உள்ளம் படைத்த பழைய மாணவர்கள் மற்றும் நல்ல நிலையில் உள்ளவர்கள் தாங்கள் வழங்க நினைக்கும் தொகையை Payment Gateway (https://contribute.tnschools.gov.in) என்ற இணையதளம் மூலம் எந்தப் பள்ளிக்கு நிதியுதவி வழங்க விரும்புகின்றனரோ அந்தப் பள்ளிக்கு வழங்கலாம். இணையதளம் மூலம் வழங்குவதன் மூலம் தாங்கள் வழங்கிய நிதியின் மூலம் நடைபெறும் பணியின் நிலையினை இணையதளம் மூலம் அறிந்து கொள்வதுடன், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணி நடைபெறுவதை நேரடியாகவும் பார்வையிடலாம்.

இணையதளம் மூலம் வழங்கப்படும் நிதியானது, வெளிப்படைத் தன்மையுடன் ஒளிவுமறைவின்றி உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை நிதியுதவி வழங்கியவர்கள் அறியலாம். மேலும், இணையதளம் மூலம் வழங்கப்படும் நிதிக்கு உடனடியாக பற்றுச் சீட்டு வழங்கப்படுவதால், நிறுவனங்களும் நன்கொடையாளர்களும் அத்தொகைக்குரிய வருமானவரி விலக்கினையும் பெறலாம்.

கல்வி என்ற ஒப்பற்ற செல்வத்தை அடுத்த தலைமுறையினருக்கு வழங்க சேவை மனப்பான்மையும், அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்டவர்கள் முன்னாள் மாணவர்களையும், தொழில் நிறுவனங்களையும் Payment Gateway என்ற இணையதளம் மூலம் நிதி வழங்கி அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன். அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே, அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம் என்று அமைச்சர் செங்கோட்டையின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com