காற்றழுத்தத் தாழ்வு நிலை, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை (நவ.20) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூா், திருவள்ளூா், வேலூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.