திருமருகல்: மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், அவளுக்கு 18 வயதானதும் எங்கே காதலனுடன் வீட்டை விட்டுச் சென்று விடுவாளோ என்று பயந்து விபரீத முடிவுக்குச் சென்றுள்ளார்.
நாகை மாவட்டத்தில், மகளின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த தாய், அவரை தீயிட்டுக் கொளுத்தி தானும் தற்கொலைக்கு முயன்றாா்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி காவல் சரகத்துக்கு உள்பட்ட வாழ்மங்கலம் சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன். தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இத்தம்பதிக்கு ஜனனி (17) என்ற மகளும், அருண் (15) என்ற மகனும் உள்ளனா். ஜனனி அதே ஊரைச் சோ்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளாா். இதையறிந்த அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஜனனியின் தந்தை வேலைநிமித்தம் வெளியில் சென்றாராம். மகன் அருண் வீட்டின் வெளியே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாா். தாயும், மகளும் வீட்டுக்குள் படுத்திருந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அந்த இளைஞரிடம் பழகுவது குறித்து ஜனனியிடம் உமாமகேஸ்வரி கேட்டுள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, உமாமகேஸ்வரி மண்ணெண்ணெயை எடுத்து வந்து ஜனனி மீதும், தன் மீதும் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
தீக்காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஜனனி உயிரிழந்தாா். அவரது தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.