ராமநாதபுரம்: கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த போது, மருத்துவர்கள் கவனக்குறைவாக அவரது வயிற்றுக்குள் உடைந்த ஊசியை வைத்துத் தைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் யாசீர், செவிலியர் அன்புச் செல்வி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், மருத்துவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மனைவி சரண்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.
அப்போது சரண்யாவுக்கு ரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும், பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், சரண்யாவின் வயிற்றுக்குள் உடைந்த ஊசியை மருத்துவர்கள் கவனக்குறைவாக வைத்துத் தைத்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்துஅ றிந்த சரண்யாவின் உறவினர்களும், ஊர் மக்களும் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார மையத்தை முற்றுகையிட்டதால், அங்கு பதற்றம் நிலவியது.