2021-இல் அதிமுக ஆட்சி மலரும் என்பதையே ரஜினிகாந்த் அதிசயம் நிகழும் என கூறியிருக்கலாம் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 2021-இல் அதிசயம் நிகழும் என ரஜினி கூறிய கருத்து உட்பட செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அவர் பேசுகையில்,
"அதிசயம் நிகழும் என்பதை ரஜினி எதைக் கூறுகிறார் என தெரியவில்லை. 2021-இல் அதிமுக ஆட்சி மலரும் என்பதையே அவர் அதிசயம் நிகழும் என குறிப்பிட்டிருக்கலாம். ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவர் கட்சி தொடங்கிய பிறகு, நான் கருத்து தெரிவிக்கிறேன்.
2021-இல் அதிமுகவைச் சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்.
மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் என்பதை கொண்டு வந்ததே திமுகதான். ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. அவர் கொண்டு வந்தால் சரி என்கிறார்கள், நாங்கள் கொண்டு வந்தால் தவறு என்கிறார்கள்.
காலசூழலுக்கு ஏற்ப கொள்கை முடிவை எடுக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. இதை ஜெயலலிதாவே கூறியிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அமமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கூட்டம் கூட்டமாக அதிமுகவில் இணைகின்றனர்" என்றார்.
இலங்கை பிரதமராக மகிந்த ராஜபட்சே பதவியேற்றிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "இதுகுறித்து அந்நாட்டு மக்கள்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். அது நமது தமிழகம் அல்ல, இந்தியாவில் ஒரு மாநிலம் அல்ல. அது அண்டை நாடு. அண்டை நாட்டு மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்" என்றார்.