2021-இல் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்!

2021-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியே மீண்டும் மலரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
2021-இல் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்!

2021-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியே மீண்டும் மலரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது:  

2021-இல் எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார் என்று தெரியவில்லை. 2021-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியே மீண்டும் மலரும் என்பதைத்தான் "அதிசயம்' என அவர் கூறியிருக்கலாம். அவர் கட்சி தொடங்கிய பிறகு, அவரது கருத்துகளுக்குப் பதிலளிக்கிறேன். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அமைத்த கூட்டணி இப்போதும் தொடர்கிறது. 2021 பேரவைத் தேர்தலில் அதிமுகவே வெற்றிபெறும்; அதிமுகவை சேர்ந்தவரே முதல்வராக நிச்சயம் வருவார். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவும் அதன் கூட்டணியும் மகத்தான வெற்றி பெறும்.

மறைமுகத் தேர்தலை அமல்படுத்தியது திமுகதான்: மறைமுகத் தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்தியது திமுகதான். ஆனால், அதை அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தற்போது எதிர்ப்பது விந்தையாக உள்ளது. மறைமுகத் தேர்தல் ஏன் நடத்தப்பட வேண்டும் என 31.6.2006-இல் பேரவையில் அவர் விளக்கமாக உரையாற்றியுள்ளார். அஸ்ஸாம், குஜராத் போன்ற மாநிலங்களில் மறைமுகத் தேர்தல் உள்ளாட்சியில் நடைபெறுகிறது.
விழுப்புரம், விருத்தாசலம் நகராட்சிகளில் நேரடித் தேர்தல் நடைபெற்றதால் அந்த அமைப்புகள் செயல்பட முடியாமல் இருந்தன. அதனால்தான் மறைமுகத் தேர்தல் கொண்டுவரப்பட்டது. மேயர் ஒரு கட்சியாகவும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியாகவும் இருந்தால், அது மக்களின் அடிப்படை பிரச்னைகளை மன்றக் கூட்டத்தில் வைத்து நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது  என மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு கருத்துகளை பேரவையில் பதிவு செய்துள்ளார்.

அவர்கள் செய்தால் சரி என்றும், நாங்கள் செய்தால் தவறு என்றும் கூறுவது எவ்விதத்தில் நியாயம்?.
1996-ஆம் ஆண்டு வரை உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல்தான் இருந்தது. நேரடி தேர்தலைக் கொண்டு வந்ததும் திமுகதான், மறைமுகத் தேர்தலைக் கொண்டு வந்ததும் திமுகதான். இப்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

காலத்துக்கேற்ப கொள்கை முடிவு: ஊராட்சி ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு நடத்தப்படும் மறைமுகத் தேர்தலைப்போல மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். மறைமுகத் தேர்தலுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

எவ்வகைத் தேர்தல் என்பதை அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழலுக்கேற்ப மறைமுகத் தேர்தல் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை சட்டரீதியாக நிறுத்த முடியாது. உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பைத் தந்துள்ளது. அரசும் அதற்கு ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பான தமிழக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்கும். அத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. 

குடிமராமத்து தொடரும்: அனைத்து மக்களும் பயனடையும் வகையில் ரேஷன் பொருள்கள் வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டு, காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. நிகழாண்டில் நல்ல மழைப்பொழிவும் பெற்றுள்ளோம். குளம், ஏரிகளில் தண்ணீர் வற்றிய பிறகு மீண்டும் குடிமராமத்துப் பணிகள் தொடரும்.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ. 2,000 வழங்குவதற்கு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தவுடன் ரூ. 2,000 வழங்கப்படும். பொங்கல் பரிசான 1,000 ரூபாயை உயர்த்தி வழங்குவதற்கான திட்டம் எதுவும் இதுவரை இல்லை. மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பேட்டியின்போது, அமைச்சர்கள் கடம்பூர் செ. ராஜு, வி.எம். ராஜலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என். சின்னத்துரை, நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com