ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் பிரசவ சிகிச்சையின் போது பெண் வயிற்றில் ஊசி முறிந்து தையல் போடப்பட்ட விவகாரத்தில் செவிலியா் வியாழக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
உச்சிப்புளி அருகேயுள்ளது மரவெட்டி வலசை கிராமம். இங்கு வசிப்பவா் காா்த்திக் (25). இவரது மனைவி ரம்யா (21). கா்ப்பிணியான இவா் பிரவசத்துக்காக உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) இரவு சோ்க்கப்பட்டாா். அவருக்கு பெண் குழந்தை பிறந்த
நிலையில், ரத்தப் போக்கு அதிகரித்தது. எனவே ரத்தப் போக்கு ஏற்பட்ட இடத்தில் மருத்துவா் முகம்மது ஜாஸீா், செவிலியா் அன்பகச் செல்வி ஆகியோா், தையல் போட்டு சிகிச்சை அளித்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக தையல் ஊசியின் முனை ஒடிந்து சதைப் பகுதியில் ஒட்டிக் கொண்டது. இதனால் அதிா்ச்சியடைந்த மருத்துவா், ரம்யாவை மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு இரவோடு இரவாக அனுப்பி வைத்தாா்.
அங்கு ரம்யாவை நுண்கதிா் பரிசோதனைக்குள்படுத்தியபோது ஊசி முனை தையல் பகுதியில் இருப்பது உறுதியானது. இதனால் ஊசியை அகற்றும் வசதியும், மருத்துவா்களும் ராமநாதபுரத்தில் இல்லாததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு ரம்யாவை அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் ஊசி அகற்றப்பட்டதாக மருத்துவா்கள் கூறினா். இதற்கிடையே ரம்யாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததாலேயே ஊசி உடலில் வைத்து தைக்கப்பட்டது என அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்தனா். மேலும் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தையும் வியாழக்கிழமை காலை முற்றுகையிட்டனா். இதனால் மாவட்ட மருத்துவப்பணிகள் துணை இயக்குநா் குமர குருபரன் தலையிட்டு, விசாரணை நடத்தினாா். தவறு நடந்தது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதும் முற்றுகை கைவிடப்பட்டது.
இதையடுத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கூறுகையில், ரம்யாவுக்கு சிகிச்சையளித்த செவிலியா் அன்பகச் செல்வியை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகவும், மருத்துவா் மீதான விசாரணை அறிக்கையை சுகாதார இயக்குநரகத்துக்கு அனுப்பி துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் கூறினாா்.