சென்னை: விவசாயிகள் என்பவர்கள் பொதுவாக இயற்கையிலேயே விடாமுயற்சி கொண்டவர்கள் என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமியின் சுயசரிதையான 'நேர்மையின் பயணம்' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகள் இயற்கையாகவே விடாமுயற்சி கொண்டவர்களாக இருப்பார்கள். முந்தைய விளைச்சலில் அவர்கள் மிகுந்த நட்டத்தையே அடைந்தாலும், ஒவ்வொரு விளைச்சலையும் விவசாயிகள் புதிய உற்சாகத்தோடுதான் துவக்குவார்கள். இதனால்தான், விடாமுயற்சி அதிகம் கொண்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் போது நாம் கடுமையான மனவேதனை அடைகிறோம் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
அதே விடாமுயற்சி கொண்ட விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால்தான் பாலகுருசாமியும் தனது வாழ்நாளில் நேர்மையை விட்டுக் கொடுக்காமல் இருந்துள்ளார். இவரது பதவிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து சிறப்பு அந்தஸ்தையும் பெற்றது என்று கூறினார் நிர்மலா சீதாராமன்.