அனைத்தும் தமிழில்: டிஜிபி திரிபாதிக்கு ஸ்டாலின் வாழ்த்து!
தமிழக காவல்துறையில் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என டிஜிபி ஜெ.கே திரிபாதி பிறப்பித்த உத்தரவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காவல்துறை தங்களின் அனைத்து பதிவேடுகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும் என தமிழக டிஜிபி ஜெ.கே திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள உத்தரவில்,
"தமிழக காவல்துறையில் காவலர்கள் வருகைப் பதிவேட்டில் அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட வேண்டும்.
போலீஸ் வாகனங்கள் அனைத்திலும் தமிழில், "காவல் துறை" என இடம்பெற்றிருக்க வேண்டும். காவல்துறையில் கடித பரிமாற்றம் உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிஜிபி திரிபாதியின் இந்த உத்தரவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிடுகையில்,
"தமிழக காவல்துறையில், வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட, குறிப்பாணைகள், கடிதங்கள், காவல் நிலைய பெயர்ப்பலகைகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதி அவர்களுக்கு வாழ்த்துகள்.
இதனை முழுமையாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றுக!" என்றார்.