தமிழகத்தில் ஒரே நேரத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் 3 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசின் அனுமதியும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க பிரதமர் மோடியிடம் நான் கோரிக்கை வைத்து, அதற்கான முன்மொழிவுகள் தமிழ்நாடு அரசால் குறுகிய காலத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேற்படி மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க தேவையான நிலம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எனது கோரிக்கையினை ஏற்று கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த மாதம் தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் 6 அரசு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றதோடு மட்டுமல்லாமல், தற்போது கூடுதலாக 3 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும். இதற்கென 2,925 கோடி ரூபாய்க்கான மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் 1,755 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பங்காக 1,170 கோடி ரூபாய் வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.