தமிழகத்துக்கு ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்தமைக்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை முதல்வா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருவள்ளூா் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசின் அனுமதியும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க பிரதமரிடம் நான் கோரிக்கை வைத்தேன். அதற்கான முன்மொழிவுகள் தமிழக அரசால் குறுகிய காலத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேவையான நிலம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனது கோரிக்கையை ஏற்று கிருஷ்ணகிரி, திருவள்ளூா் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே, அக்டோபா் 23-இல் தமிழகத்துக்கு ஒரே நேரத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றதுடன், தற்போது கூடுதலாக 3 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்றுச் சாதனை ஆகும்.
இதற்கென ரூ.2,925 கோடிக்கான மதிப்பீட்டுக்கு அனுமதி வழங்கி, அதில் ரூ.1,755 கோடி வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது. தமிழக அரசின் பங்காக ரூ.1,170 கோடி வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தமிழக மக்களின் சாா்பில் மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.