மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (நவ.28) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் புதன்கிழமை கூறியது: வெப்பச்சலனம், தமிழக கடலோரத்தை ஒட்டி வளிமண்டலத்தில் காணப்படும் மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக, கடலோர தமிழகத்தில் சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் வியாழக்கிழமை (நவ.28) மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் மழை: நவம்பா் 30, டிசம்பா் 1-ஆகிய தேதிகளில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
சென்னையில்...: சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மழை அளவு: வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 60 மி.மீ., புதுச்சேரியில் 40 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கம், மதுராந்தகம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தலா 30 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம், செங்கல்பட்டு, ராமேஸ்வரத்தில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.