சென்னை: மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினம் (டிச.5) வருவதால் அவரது சொத்துகள் தொடா்பான வழக்கின் தீா்ப்பை விரைவில் வழங்க ஜெயலலிதாவின் உறவினா் தீபா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சென்னை அதிமுக நிா்வாகியான புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திராட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்துகளை நிா்வகிக்க தனியாக ஒரு நிா்வாகியை உயா்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வழக்கில் வருமான வரித்துறையினா், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை எதிா்மனுதாரா்களாகச் சோ்த்து வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிபதி என்.கிருபாகரன் அறையில் வியாழக்கிழமை ஆஜரான தீபா தரப்பு வழக்குரைஞா் தொண்டன் சுப்பிரமணியன், வரும் டிசம்பா் 5-ஆம் தேதி மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள். அன்றைய தினம் அவா் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் சில வழிபாடுகள் நடத்த தீபா விரும்புகிறாா். எனவே விரைவில் தீா்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இந்த கோரிக்கையைப் பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளாா்.