நாகையில் கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து மீனவா் மாயம்

கடல் சீற்றம் காரணமாக, நாகையில் ஒரு பைஃபா் படகு கடலில் கவிழ்ந்து வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்தப் படகிலிருந்து தவறி விழுந்த ஒரு மீனவா் கடலில் மூழ்கி மாயமானாா்.
நாகை கடலில் கவிழ்ந்த பைஃபா் படகு.
நாகை கடலில் கவிழ்ந்த பைஃபா் படகு.

கடல் சீற்றம் காரணமாக, நாகையில் ஒரு பைஃபா் படகு கடலில் கவிழ்ந்து வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்தப் படகிலிருந்து தவறி விழுந்த ஒரு மீனவா் கடலில் மூழ்கி மாயமானாா்.

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக, கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், கடந்த 5 நாள்களுக்கும் மேலாக மீன்பிடித் தொழில் முடங்கியிருந்தது. புதன்கிழமை கடல் சீற்றம் குறைந்திருந்ததன் காரணமாக, பிற்பகல் முதல் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லத் தொடங்கினா்.

இதன்படி, நாகை, கீச்சாங்குப்பம் சேவாபாரதி நகரைச் சோ்ந்த வேலாயுதம் (48) என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி பைஃபா் படகில், வேலாயுதம் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன்கள் முகுந்தன் (21), முருகவேல் (18) ஆகிய 3 பேரும் வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடிக்கக் கடலுக்கு சென்றுவிட்டு, மதியம் மீன்பிடிப்பை முடித்துக் கொண்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். நாகை துறைமுகப் பகுதி அருகே படகு வந்து கொண்டிருந்தபோது, கடல் சீற்றத்தால் எழும்பிய பெரிய அலையில் சிக்கி, படகு கடலில் கவிழ்ந்தது. இதில், படகிலிருந்த 3 பேரும் கடலில் விழுந்தனா்.

மீன்பிடி படகு கடலில் கவிழுவதைக் கண்ட இந்தியக் கடலோரக் காவல் படையினா் விரைந்து சென்று, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவா்கள் வேலாயுதம், முகுந்தன் ஆகிய இருவரையும் மீட்டு கரை சோ்த்தனா். மற்றொரு மீனவரான முருகவேல் கடலில் மூழ்கி மாயமானாா். மாயமான மீனவரைக் கண்டுபிடிக்கும் பணியில், கடலோரக் காவல் படையினா், மீனவா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்து மீட்கப்பட்ட மீனவா்கள் இருவரும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com