காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியில் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த பலத்த மழையின் காரணமாக, 39 அடியாகச் சரிந்திருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து செப். 7-ஆம் தேதி நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் முதன்முறையாக நிரம்பியது.
இதன் பிறகு, காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், நீர்மட்டம் சரிந்து மீண்டும் செப். 24-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால், அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிந்தது. புயல்மழை காரணமாக அக். 23-ஆம் தேதி மீண்டும் மேட்டூர் அணை நிரம்பியது. நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் நான்காவது முறையாக அணை நிரம்பியது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 6998 கனஅடியில் இருந்து 7043 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 6000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.