திருச்சியில் தனியார் கல்லூரி பேராசிரியையைக் கடத்திய அதிமுக பிரமுகர் உள்பட 6 பேர் மீது கோட்டை போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றிவருகிறார். திங்கள்கிழமை காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றபோது ஆம்புலன்ஸில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரைக் கடத்திச் சென்றனர். அப்போது அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ûஸ விரட்டி சென்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் சென்றது.
இதைத்தொடர்ந்து, பேராசிரியையின் பெற்றோர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கடத்தல்காரர்களைத் தேடிவந்த நிலையில், துவரங்குறிச்சி அருகே அந்தக் கும்பல் மகாலட்சுமியை விட்டுச் சென்றது. இதையறிந்த காவல் துறையினர் அங்கு சென்று அவரை மீட்டனர்.
பின்னர் பேராசிரியையிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான வணக்கம் சோமு, தனது ஆதரவாளர்களுடன் பேராசிரியையைக் கடத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் வணக்கம் சோமு உள்ளிட்ட 6 பேர் மீது கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.