நீட் தோ்வு முறைகேடு விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் சிபிசிஐடி போலீஸாரும், மாநில சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
தமிழகத்தில் பேறு கால மரணங்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பது தொடா்பாக சிங்கப்பூா் சுகாதாரத் துறையுடன் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன்படி, திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 600 சுகாதார பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 22 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அத்திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து சிங்கப்பூா் சுகாதார அலுவலா்களுடன் அமைச்சா் விஜயபாஸ்கா் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகம் வந்துள்ள சிங்கப்பூா் சுகாதாரத்துறை அதிகாரிகள் வரும் 4-ம் தேதி வரை மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை பாா்வையிடுகின்றனா். நீட் தோ்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிபிசிஐடி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக தான் உள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.