காந்தி ஜயந்தியை முன்னிட்டு, கன்னியாகுமரி காந்தி மணிமண்டபத்தில் உள்ள அவரது அஸ்தி கட்டடத்தில் அரசு சார்பில் புதன்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, நினைவிடம் மீது ஒளிர்ந்த அபூர்வ சூரியஒளியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.
காந்தியடிகளின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் 2.2.1948-இல் கரைக்கப்பட்டது. முன்னதாக, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடற்கரையில் அஸ்தி வைக்கப்பட்டது. அந்த இடத்திலேயே 1956-இல் காந்திக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. மேலும், ஆண்டுதோறும் காந்தி பிறந்த தினத்தில் (அக். 2) சூரிய கதிர்கள் அஸ்தி கட்டடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபத்தின் சிறப்பம்சமாகும். நிகழாண்டு, காந்தி ஜயந்தியையொட்டி புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு அஸ்தி கட்டடத்தில் சூரிய ஒளி விழுந்தது. இதை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும், அஸ்தி கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
முன்னதாக, திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன், மாநில பாஜக துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி, காந்திஜி கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் பா.தம்பித்தங்கம், குமரி மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சிப் பொறுப்பாளர் சசி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.