நெல்லை: நெல்லையில் வீரத் தம்பதியை தாக்கி தங்க நகையைப் பறித்த முகமூடிக் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லை எஸ்பி அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அருண் சக்திகுமார், நெல்லையில் வீரத் தம்பதியை தாக்கி தங்க நகையைக் கொள்ளையடித்த வழக்கில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் பாலமுருகன், பெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பதியை தாக்கியவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அனைத்து கோணங்களிலும் கொள்ளையர்களை தேடும் பணி நடந்து வந்தது.
அதன் பயனாக, பாலமுருகன், பெருமாள் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் கொள்ளையடித்துச் சென்று 35 கிராம் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளையர்கள் இருவரும் இரண்டு நாட்களாக தம்பதியினர் இருந்த வீட்டை நோட்டமிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.