திருச்சி நகைக் கடை கொள்ளை: கொள்ளையடித்தவர்களில் ஒருவர் பிடிபட்டார்!

திருச்சி நகைக் கடை கொள்ளை: கொள்ளையடித்தவர்களில் ஒருவர் பிடிபட்டார்!

திருச்சியில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடித்த நபர்களில் ஒருவர் திருவாரூரில் காவல் துறையினரிம் வாகன சோதனையில் பிடிபட்டுள்ளார். 


திருச்சியில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடித்த நபர்களில் ஒருவர் திருவாரூரில் காவல் துறையினரிம் வாகன சோதனையில் பிடிபட்டுள்ளார். 

திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையின் பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு ரூ. 13 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகளை மர்ம நபர்கள் புதன்கிழமை திருடிச் சென்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததால், திருச்சி முகமூடி விற்பனை கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

விலங்கு முகம் போன்ற முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள், கையுறைகளையும் அணிந்து, கைரேகை பதிவாகாமல் திட்டமிட்டு கொள்ளையடித்தனர்.

முக அடையாளம் தெரியாமல், கைரேகை பதிவாகாமல் மிகவும் திட்டமிட்டு திருடிய கொள்ளையர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வந்தனர்.

அதாவது, விலங்கு முகம் போன்ற முகமூடிகளை விற்பனை செய்யும் கடைகளில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அங்குள்ள சிசிடிவி கேமராக்களில், முகமூடிகளை வாங்கிச் செல்லும் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நகைக் கடை இன்னும் வாடிக்கையாளர்களுக்கு திறக்கப்படாமல், இரண்டாவது நாளாக மூடப்பட்டிருக்கும் நிலையில், நகைக் கடையில் பணியாற்றிய பணியாளர்கள் அனைவரும் கடைக்கு வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்த பிறகு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் திருவாரூரில் காவல் துறையினரின் வாகன சோதனையின்போது பிடிபட்டார். அவர் தன்னுடன் 2 மூட்டையில் சுமார் 2 1/2 கிலோ தங்கத்துடன் போலீஸாரிடம் பிடிபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரிடம் இருந்த நகைகளின் பார் கோட் மூலம் அது திருச்சி நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. 

நகைக் கடையில் கொள்ளையடிக்கப்படும் சிசிடிவி காட்சியில் இரண்டு நபர்கள் இருந்த நிலையில், தற்போது ஒருவர் பிடிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநிலத்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்தது. இந்நிலையில், தற்போது போலீஸாரிடம் சிக்கியுள்ள நபர் திருச்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது.

கொள்ளை சம்பவ விவரம்:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனியார் பள்ளி மைதானத்தையொட்டி உள்ள வணிக வளாகத்தில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். மீண்டும் புதன்கிழமை காலை ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அலங்கார பொம்மைகள் மீது காட்சிப்படுத்தப்பட்டிருந்த நகைகள் மாயமாகியிருந்தது. மேலும் கடையின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் உள்ளே நடமாடியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

தகவலறிந்து வந்த கடையின் கிளை மேலாளர் ஹரிராமன் உள்ளிட்டவர்கள் மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ், துணை ஆணையர்கள் ஆ.மயில்வாகனன், நிஷா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவையும் ஆய்வு செய்தனர். 

அதில், பள்ளி மைதானம் வழியாக வந்த மர்ம நபர்கள் நகைக்கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு பொம்மை முகமுடி அணிந்து இருவர் உள்ளே நுழைவதும், பின்னர் தரைதளத்தில் இருந்த ரூ.13 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் மற்றும் 180 கிராம் வைர நகைகளை திருடி சென்றதும் தெரிய வந்தது. மேலும் போலீஸார் அடையாளம் காணமுடியாத அளவுக்கு, தாங்கள் நடமாடிய பகுதிகளில் மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவிவிட்டுச் சென்றிருந்தனர்.

கடைக்குள் அலமாரியில் இருந்த நகைகளை எடுக்கும் போது, அங்கிருக்கும் அலாரம் ஒலிக்காத அளவுக்கு பயன்படுத்திய இரும்பு ராடு ஒன்றும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள் மர்மநபர்களின் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் அா்ஜூன் பள்ளி மைதானத்தில் சிறிது தூரம் ஓடிவிட்டு படுத்து கொண்டது. திருடுபோன நகை மற்றும் மர்மநபர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் குறித்து போலீஸார் தரப்பில் உறுதிப்படுத்தபடாத நிலையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.

சம்பவம் குறித்து கடையின் மேலாளர் கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வணிக வளாகத்தையொட்டி உள்ள மற்ற கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com