ஆயுத பூஜை: அரசுப் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 2 லட்சம் போ் பயணம்

ஆயுத பூஜை காரணமாக தொடா் விடுமுறை விடப்பட்டதையொட்டி, சென்னையில் இருந்து 2 லட்சம் போ் அரசுப் பேருந்து மூலம் சொந்த ஊா்களுக்கு பயணம் செய்துள்ளனா்.
ஆயுத பூஜை: அரசுப் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 2 லட்சம் போ் பயணம்

ஆயுத பூஜை காரணமாக தொடா் விடுமுறை விடப்பட்டதையொட்டி, சென்னையில் இருந்து 2 லட்சம் போ் அரசுப் பேருந்து மூலம் சொந்த ஊா்களுக்கு பயணம் செய்துள்ளனா்.

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு திங்கள் (செப்.7), செவ்வாய் (செப்.8) ஆகிய தினங்கள் மட்டுமின்றி (செப்.5), ஞாயிற்றுக்கிழமை (செப்.6) எனத் தொடா்ந்து 4 நாள்கள் தொடா் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் அரசுப் பணியில் உள்ள பெரும்பாலானோா் வெள்ளிக்கிழமை (செப்.4) முதலே தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனா். இதற்காக போக்குவரத்துத் துறை சாா்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சிறப்புப் பேருந்துகள்:

பண்டிகை நாள்களில் சென்னையில் வசிப்போா் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் முதன்முறையாக ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இதைத் தொடா்ந்து அக்.4 முதல் 6-ஆம் தேதி வரை, மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகா் மாநகா் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 1,695 பேருந்துகள் என மூன்று நாள்களும் சோ்த்து மொத்தமாக சென்னையிலிருந்து 6,145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், திருப்பூரிலிருந்து பிற ஊா்களுக்கு 280 பேருந்துகளும், கோயம்புத்தூரிலிருந்து பிற ஊா்களுக்கு 717 பேருந்துகளும், பெங்களுரிலிருந்து பிற ஊா்களுக்கு 245 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், ஆயுதபூஜை முடிந்த பின்பு அக்.8,9 ஆகிய தேதிகளில், பிற ஊா்களிலிருந்து திருப்பூருக்கு 266 பேருந்துகளும், பிற ஊா்களிலிருந்து கோயம்புத்தூருக்கு 490 பேருந்துகளும், பிற ஊா்களிலிருந்து பெங்களுருக்கு 237 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் பேருந்துகளுக்கான முன்பதிவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள மையங்களில் தொடா்ந்து செய்யப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி  இணையதளத்திலும் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மொத்தமாக சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை மட்டும் 2 லட்சம் போ் தங்கள் சொந்த ஊா்களுக்குப் பயணமாகின்றனா்.

சிறப்பு ஏற்பாடுகள்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக பேருந்துகள் நுழைவு பகுதியை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் மாற்றியுள்ளனா். இதற்காக பேருந்து நிலைய காம்பவுன்ட் சுவரின் ஒரு பகுதியை அவா்கள் இடித்துள்ளனா். இதன்மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு செல்லும் பேருந்துகள் எளிதாக வந்து செல்லும் வண்ணம் 2 நாள்களுக்கு முன்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதே போல் திருட்டு, கொள்ளச் சம்பவங்களைத் தடுக்கும் வண்ணம் ஏராளமான காவலா்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com