வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.4) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:
தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.4) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு: வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தலா 40 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தலா 30 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.