ஆதார் அட்டையில் உள்ள பிழைகளுக்காக விவசாயிகளுக்கான நிதியுதவியை மறுப்பது சரியல்ல: ராமதாஸ் 

ஆதார் அட்டையில் உள்ள பிழைகளுக்காக விவசாயிகளுக்கான நிதியுதவியை மறுப்பது சரியல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: ஆதார் அட்டையில் உள்ள பிழைகளுக்காக விவசாயிகளுக்கான நிதியுதவியை மறுப்பது சரியல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மானியம் வழங்கும் திட்டத்தின்படி, மூன்றாவது தவணை நிதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு நிர்ணயித்த தகுதிகளின் அடிப்படையில் முதல் இரு தவணை நிதி பெற்ற கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மூன்றாவது தவணை நிதி மறுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளை பாதிக்கும் இந்த நடவடிக்கை நியாயமற்றதாகும்.

நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு  தலா ரூ.2,000 வீதம், ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 2 தவணை நிதியுதவி வழங்கப்பட்டு விட்ட நிலையில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்திற்கான நிதியுதவி இப்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பருவத்தில் முதல் இரு மாதங்கள் முடிவடைந்து விட்ட நிலையில், தகுதியுடையவர்களில் 10%&க்கும் குறைவானவர்களுக்கே நிதி வழங்கப்பட்டுள்ளது.

பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் காட்டப்படும் கெடுபிடிகளே காரணம் எனத் தெரிகிறது.

விவசாயிகளின் விண்ணப்பத்திலுள்ள பெயரும், ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பொருந்தவில்லை என்பது தான் நிதியுதவி மறுக்கப்படுவதற்கான முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியாவில்  ஆதார் அட்டைகள் எந்த லட்சனத்தில் வழங்கப்படுகின்றன; அவற்றில் எவ்வளவு பிழைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனவே, அதைக் காரணம் காட்டி நிதியுதவியை மறுப்பது சரியல்ல. அதுமட்டுமின்றி, விவசாயிகள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் முதல் இரு தவணை நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், மூன்றாவது தவணையை மட்டும் மறுப்பது அறமாகாது.

இவ்வாறாக தாங்கள் செய்யாத தவறுகளுக்காக நிதியுதவியை இழக்கும் தண்டனையை அனுபவிக்கும்  நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். உழவர்களை இப்படி இரு நிலைக்கு அரசு ஆளாக்கக்கூடாது.

நடப்பாண்டின் முதல் இரு பருவங்களில் ரூ.50,000 கோடி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ரூ.13,400  கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.   

எனவே, இத்திட்டத்தின்படி விண்ணப்பித்த அனைத்து உழவருக்கும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் விண்ணப்பங்களில் உள்ள குறைகளை சரிசெய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இத்திட்டத்தின்படி மானியம் பெற தகுதியுடைய, ஆனால் இதுவரை விண்ணப்பிக்காத உழவர்களும் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்து, நிதியுதவி பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com