தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் அதிமுக அரசுக்கு மக்கள் துணை நிற்க வேண்டுமென தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், விக்கிரவாண்டி ஒன்றிய அதிமுக தேர்தல் பணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை ஆசூர், கொட்டியம்பூண்டி, உலகலாம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் தேவை அறிந்து ஏராளமான புதிய நலத் திட்டங்களை செயல்படுத்தினார்.
குறிப்பாக, கல்வியை மேம்படுத்தும் வகையில், விலையில்லா பாடப் புத்தகம் முதல் மடிக்கணினிகள் வரை வழங்கி, கிராமப்புற ஏழை மாணவர்களும் உயர்கல்வியைப் பெறுவதற்காக, வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத திட்டங்களை செயல்படுத்தினார்.
தொழில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி, பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையை எடுத்தார்.
அவரது வழியில் செயல்படும் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, தற்போதைய முதல்வர் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் நிறுவனங்களை பார்வையிட்டு, ரூ.3,500 கோடி அளவிலான தொழில்களை தமிழகத்தில் தொடங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளையும் எடுத்தார்.
திண்டிவனத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் உணவுப் பூங்கா அமையவுள்ளது.
சின்னசேலத்தில் சர்வதேச அளவிலான கால்நடை ஆராய்ச்சி மையம் அமைவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஆகவே, அதிமுக அரசுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும். இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் மேலும் பல நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றார் அமைச்சர் எம்.சி.சம்பத்.
பிரசாரத்தின்போது, விழுப்புரம் அதிமுக நகரச் செயலர் ஜி.பாஸ்கரன், விழுப்புரம், பண்ருட்டி பகுதி அதிமுக, பாமக, தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.