கீழடியில் மத்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 கட்ட அகழாய்வுகளுக்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
திரைப்பட இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் 50 பேர் ஜனநாயகத்தைக் காக்கவேண்டும் என கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனால், அவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவம், பாஜக ஆட்சி ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதற்கு சான்றாகும்.
இந்தியாவை ஆங்கிலேயேர்கள் ஆட்சி செய்தபோது கூட இத்தகையை நிலை இருந்ததில்லை. எனவே, திரையுலகப் பிரமுகர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற, பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மதுரை அருகே கீழடியில் தமிழர்களின் நகர நாகரிகம் 6-ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இன்னும் முழுமை பெறவில்லை. கீழடியில் மத்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 கட்ட அகழாய்வுகளின் அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். கீழடியில் கண்டறியப்பட்டுள்ள பொருள்களை பொதுமக்கள் நேரடியாகப் பார்க்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள். அதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாடுபடும். ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றி பெறும் என்றார்.