தஞ்சாவூர் கலைக்கூடத்தில் இருந்த இரு ஐம்பொன்சிலைகள் மீட்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சொந்தமான இரு ஐம்பொன் சிலைகள் கலைக் கூடத்தில் இருப்பதை உறுதிப்படுத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், அவற்றை சனிக்கிழமை மீட்டனர்.
தஞ்சாவூர் கலைக்கூடத்தில் இருந்த இரு ஐம்பொன்சிலைகள் மீட்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சொந்தமான இரு ஐம்பொன் சிலைகள் கலைக் கூடத்தில் இருப்பதை உறுதிப்படுத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், அவற்றை சனிக்கிழமை மீட்டனர்.
 தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் கி.பி. 985 முதல் கி.பி. 1014 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். இக்கோயிலுக்கு ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன்மாதேவியரால் 29-ஆவது ஆட்சியாண்டின் போது வீணாதர தட்சிணாமூர்த்தி என்கிற தஞ்சை அழகர், திரிபுராந்தகர் என ஐம்பொன்னால் செய்யப்பட்ட இரு சிவன் சிலைகளை செய்து கோயிலுக்கு வழங்கினார்.
 இந்நிலையில் தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்த தஞ்சை அழகர் மற்றும் திரிபுராந்தகர் சிலைகள் காணாமல் போனது.
 இச்சிலைகள் பின்னாளில் மீட்கப்பட்டு, தஞ்சாவூர் ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து பாதுகாப்புக் கருதி, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடத்தில் வைக்கப்பட்டது.
 மேலும், இந்த இரு சிலைகளும் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
 இந்நிலையில் தமிழகச் சிலைக் கடத்தல் தடுப்புக் காவல் பிரிவின் புலன் விசாரணைக் குழுத் தலைவர் ஏ.ஜி. பொன்மாணிக்கவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை காலை தஞ்சாவூர் கலைக் கூடத்துக்குச் சென்றனர்.
 இக்கலைக் கூடத்தில் ஏறத்தாழ 3 மணிநேரம் ஆய்வு செய்தனர். பின்னர், அங்கிருந்த காப்பாட்சியர் சிவக்குமாரிடம், இந்த இரு சிலைகளும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சொந்தமானவை என்றும், பூஜிக்கப்பட்டு வணங்கக்கூடிய தெய்வத் திருமேனிகள் அருங்காட்சியத்தில் வைக்கக்கூடாது எனவும், இந்தச் சிலைகள் காணாமல் போனது தொடர்பாகவும் தஞ்சாவூர் மேற்குக் காவல் நிலையத்தில் 2018, மார்ச் 2- ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறினர்.
 இதையடுத்து இரு சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் எடுத்து செல்ல சிவக்குமார் அனுமதித்தார். பின்னர், போலீஸார் இரு சிலைகளையும் திருச்சியிலுள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவல் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர்.
 இச்சிலைகள் அக். 10- ஆம் தேதி சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.
 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பொன் மாணிக்கவேல் தெரிவித்தது:
 தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு 66 தெய்வத் திருமேனிகள் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் செய்து ஏராளமான ஆபரணங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
 இக்கோயிலில் இருந்த பல ஐம்பொன் சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. இது குறித்து மேற்குக் காவல் நிலையத்தில் 2018 -ஆம் ஆண்டில் புகார் அளித்தோம்.
 தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஏற்கெனவே ராஜராஜசோழன், பட்டத்து அரசியான லோகமாதேவி சிலைகள் குஜராத் அருங்காட்சியத்திலிருந்து 2018, மே 27- ஆம் தேதி மீட்கப்பட்டு, கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.
 இதன் தொடர் நடவடிக்கையாக, தற்போது தஞ்சாவூர் கலைக்கூடத்தில் இருந்த இரு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில், தஞ்சை அழகர் என்ற சிவன் சிலை 60 கிலோ எடையும், திரிபுராந்தகர் சிலை 56 கிலோ எடையும் உடையது. இவை பல கோடி ரூபாய் மதிப்புடையது. இதற்கு முன்பு இந்த சிலைகள் தஞ்சாவூர் ராஜகோபாலசுவாமி கோயிலிலும், அரண்மனை தேவஸ்தானத்திலும் சில காலங்கள் இருந்துள்ளன.
 பெரியகோயிலில் இருந்த இரு சிலைகளும் 69 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. இதுதொடர்பாக சில குற்ற வழக்குகள் உள்ளன. இச்சிலைகள் நீதிமன்றம் மூலமாக மீண்டும் தஞ்சாவூர் பெரியகோயிலில் ஒப்படைக்கப்படும் என்றார் பொன் மாணிக்கவேல்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com