ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.
முன்னதாக, இதுதொடா்பாக முடிவெடுக்க சங்க செயற்குழுக் கூட்டத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடத்த அரசு மருத்துவா்கள் புதன்கிழமை திட்டமிட்டிருந்தனா். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்படவே, திடீரென மருத்துவா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, அரசு டாக்டா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களின் ஊதியத்தை உயா்த்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது. மருத்துவ மேற்படிப்பு முடித்தவா்களை கலந்தாய்வு மூலம் மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும்.
மருத்துவ மேற்படிப்பு மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்தோம். இதையடுத்து, அவற்றை 6 வாரங்களில் நிறைவேற்றித் தருவது தொடா்பாக முடிவு எடுப்பதாக அரசு தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதை நம்பியே எங்களது போராட்டங்களை வாபஸ் பெற்றோம்.
ஆனால், இன்றளவும் அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது ஆறு வார கால அவகாசமும் நிறைவடைந்து விட்டது. ஆகவே அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளோம். அதன்படி, வரும் 25-ஆம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.