அரசுப் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 3 நாள்களில் 4.79 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்பட்டன. முன்னதாக, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.
இதன் காரணமாக, அரசுப் பணியில் உள்ள பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை முதலே தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கினர். ஆயுத பூஜையை முன்னிட்டு, முதல்முதலாக சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் இந்த சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
அக்டோபர் 4 முதல் 6-ஆம் தேதி வரை மொத்தம் 6,145 பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்படி, சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,225 பேருந்துகளும், 150 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 2,375 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளின் மூலமாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 875 பயணிகள் பயணித்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களிலும் பயணித்துள்ள விவரங்களையும் சேர்த்து மொத்தம் 8,490 பேருந்துகளில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 250 பயணிகள் பயணித்துள்ளனர். இதுமட்டுமின்றி ஆயுதபூஜை முடிந்த பின்பு செவ்வாய் (அக்.8) மற்றும் புதன்கிழமை (அக்.9) ஆகிய இரு தினங்களில், பிற ஊர்களிலிருந்து திருப்பூருக்கு 266 பேருந்துகளும், கோயம்புத்தூருக்கு 490 பேருந்துகளும், பெங்களூருக்கு 237 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. குறிப்பாக பொதுமக்கள் சென்னை திரும்பும் போது போக்குவரத்து நெரிசல் அதிகரிக்காத வண்ணம், ஏராளமான காவலர்கள் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தி இருப்பதாக, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.