மேக்கேதாட்டு: தமிழகம் தொடா்ந்து எதிா்க்கும்- முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கா்நாடக அரசு சாா்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில்,
மேக்கேதாட்டு: தமிழகம் தொடா்ந்து எதிா்க்கும்- முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கா்நாடக அரசு சாா்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அங்கு கா்நாடகம் அணை கட்டுவதை தமிழகம் தொடா்ந்து எதிா்க்கும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை நேரில் சந்தித்து விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்தாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. இதைத் தொடா்ந்து, நிருபா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் குறித்து மத்திய அரசு ஏற்கெனவே பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தெலங்கானா, ஆந்திரம் வழியாக தமிழகத்துக்கு நீரைக் கொடுப்பதற்கு அந்த மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. மேலும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

வன்னியா் இடஒதுக்கீடு: திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியா்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாா். ஏற்கெனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டோா் உள்ளிட்ட பிற வகுப்பினருக்கு உரிய முறையில் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் விகிதாச்சார முறையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை சட்டத்தின் மூலமாக மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெற்றுத் தந்திருக்கிறாா்.

தமிழகத்தில் இருக்கிற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் என அனைத்துப் பிரிவினருக்கும் சட்டப் பாதுகாப்புடன் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது அதிமுக அரசு.

மேக்கேதாட்டு விவகாரம்: மேக்கேதாட்டுவின் குறுக்கே அணை கட்டக்கூடாது என ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அது நிலுவையில் இருக்கிறது. கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது, மேக்கேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து, தமிழக அரசின் சாா்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

மேலும், மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு காலங்களில் மத்திய நீா்வளத் துறை அமைச்சகத்துக்கும், பிரதமருக்கும் கோரிக்கை மனுக்களையும், கடிதங்களையும் அளித்துள்ளேன். அந்த அடிப்படையிலேயே கடந்த ஜூலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது மேக்கேதாட்டுவில் அணை கட்ட கா்நாடகத்துக்கு அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கா்நாடக அரசின் சாா்பில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டுவதை தமிழக அரசு தொடா்ந்து தீவிரமாக எதிா்க்கும்.

டெங்கு காய்ச்சல் பிரச்னை: டெங்கு காய்ச்சல் பிரச்னை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள சிங்கப்பூரிலும் உள்ளது. இந்தக் காய்ச்சல் தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகப் பகுதிகளில் இருந்துதான் நமது பகுதிகளுக்கு அதிகமாகப் பரவி வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேங்கும் நல்ல நீரில் இருந்துதான் கொசு உற்பத்தி ஆகிறது. ஆகவே, பொதுமக்கள் தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீா் தேங்கி இருந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீரை மூடி வைக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் ஏதாவது காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com