தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள சசிகலாவை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியாவுக்கு வருகை தருவதை அனைவரும் வரவேற்கிறோம். காஷ்மீர் பிரச்னையில் பிற நாடுகள் தலையிடக் கூடாது. அது இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னை. அதை அந் நாடுகளே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது நாட்டின் தலையீடுகூடாது என சீனா அறிவித்திருப்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.
சீன அரசு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது என பேசப்பட்ட நிலையில், தற்போது சீனாவின் இந்த கருத்து மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பாக அக்.17-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.
விரைவிலே கட்சி பதிவு செய்யப்படும். அதன்பிறகு கட்சிக்கு தனி சின்னம் பெற்று உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம். தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. கர்நாடகத்தில் தமிழ்ப் பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்திலே மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது எனக் கூறி தமிழக அரசு பள்ளிகளை மூடி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு எவ்வாறு கர்நாடக அரசிடம் இதுகுறித்துப் பேச இயலும். கர்நாடகத்தில் உள்ள தமிழர்களே கர்நாடக அரசிடம் பள்ளிகளைத் திறக்க கோரிக்கை வைக்கலாம் என்றார்.