சீன அதிபர் ஷி ஜின்பிங் தங்கவிருக்கும் கிண்டி தனியார் ஹோட்டல் முன்பாக போராட்டம் நடத்த முயன்ற திபெத்தியர்கள் இன்று தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான மாமல்லபுரத்தில் இன்று மாலை சந்திக்க இருக்கின்றனர்.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 12 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவர் தொடர்ந்து, ஹெலிகாப்டரில் கோவளம் ஹோட்டலுக்குச் செல்கிறார். அதேபோன்று பிற்பகல் 1.30 மணியளவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை வருகை தரவிருக்கிறார்.
இந்த நிலையில், சீன அதிபர் தங்கவிருக்கும் கிண்டி கிராண்ட் சோழா ஹோட்டல் முன்பாக போராட்டம் நடத்த முயன்ற திபெத்தியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கிண்டி காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று பெங்களுருவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த திபெத்தியர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.