மாமல்லபுரத்தில் இரவு உணவு விருந்த நிறைவடைந்ததையடுத்து, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் தங்களது விடுதிக்குப் புறப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் இன்று மாலை மாமல்லபுரத்தில் சந்தித்தனர். அதன்பிறகு இருவரும் அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களைப் பார்த்து ரசித்தனர்.
இதைத்தொடர்ந்து, கடற்கரை கோயில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை இருவரும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதன்முடிவில், கலைக் குழுவினருடன் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து, பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு நினைவுப் பரிசை வழங்கினார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்குக்கு 7 மணியளவில் இரவு உணவு விருந்தளித்தார்.
இதன்பிறகு, ஆலோசனையில் ஈடுபட்ட இருநாட்டுத் தலைவர்களும் திட்டமிடப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து, இரவு சுமார் 9.50 மணியளவில் சீன அதிபர் ஷி ஜின்பிங், கிண்டியில் உள்ள விடுதிக்குப் புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி அவரை வழியனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியும் கோவளம் நோக்கி புறப்பட்டார்.
சுமார் 2 மணி நேரம் வரை நீடித்த ஆலோசனை குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.