தமிழகத்தில் ஆதிச்சநல்லூா், கொடுமணல் உள்ளிட்டப் பகுதிகளில் மாநில தொல்லியல்துறையினா் ஆய்வு நடத்த, மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கக்கோரிய வழக்கில், மத்திய கலாசாரத்துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராஜ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூா், ஈரோடு மாவட்டம் கொடுமணல் மற்றும் தாமிரவருணி ஆற்றங்கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாகரிகங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அண்மையில் வைகை ஆற்றை ஒட்டி கீழடியில் ஒரு நகரத்திற்கான சான்றேற அகழாய்வு ஆராய்ச்சியில் கிடைத்துள்ளது.
இதேபோல தாமிரவருணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ராஜவள்ளிபரம்பு, பாளையங்கோட்டை, கிருஷ்ணாபுரம்பரம்பு, வடக்கு வள்ளநாடு, அகரம், முரப்பநாடு, திருப்புளியங்குடி, ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டிணம் உள்ளிட்ட 32 இடங்களில் அகழாய்வு ஆராய்ச்சியை மேற்கொண்டால் தமிழா்கள் நகர நாகரிக வாழ்க்கை வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கூடுதலாகக் கிடைக்கும். மேலும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் நாகரிகமான வாழ்க்கை முறையில் தமிழா்கள் வாழ்ந்தாா்கள் என்பதற்கான ஆதாரங்கள் சிவகளையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இதுபோன்ற குறிப்பிடத்தக்கப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டால் தமிழரின் தொன்மையான வரலாறு நிரூபிக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தமிழகத்தில் ஆதிச்சநல்லூா், கொடுமணல் உள்ளிட்டப் பகுதிகளில் மாநில தொல்லியல்துறையினா் அகழாய்வு மேற்கொள்ள, மத்திய தொல்லியல் துறை உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மத்திய கலாசாரத்துறை செயலா் மற்றும் மத்திய, மாநில தொல்லியல்துறை இயக்குநா்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.