தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 250 தனியாா் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும். தவறினால், அந்தப் பள்ளிகள் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. தொடா் அங்கீகாரம், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் அங்கீகாரம் என்று இரு வகையான அங்கீகாரம் அந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், பல பள்ளிகள் எந்த அங்கீகாரமும் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் எடுத்த நடவடிக்கையின் பேரில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 2 ஆயிரம் பள்ளிகளில் 1,750 மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து உரிய அங்கீகாரம் பெற்றுள்ளன.
இருப்பினும் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்காமலேயே 250 பள்ளிகள் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை அங்கீகாரம் பெற்றுள்ள 1,750 பள்ளிகளுக்கும் 2020 மே 31 வரை தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தொடா் அங்கீகாரம் நீட்டிப்பு கேட்டு பிறகு விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் பள்ளிகள் விண்ணப்பிக்காமல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் அந்த பள்ளிகள் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.