சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு தேனியைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் தர்பூசணி பழத்தில் வரவேற்பு அளித்துள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இடையிலான வரலாற்றுச் சிறப்பு சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று கோவளம் தாஜ் ஹோட்டலிலும் இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர்.
இதற்காக சென்னை வந்த சீன அதிபரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் விமான நிலையத்தில் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து விமான நிலைய வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டியத்தை பார்வையிட்ட ஷி ஜின்பிங், அங்கேயே சிறிது நேரம் நின்று ரசித்தார்.
இவை தவிர தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு முறையில் தமிழக மக்கள் அவரை வரவேற்றனர்.
அந்த வகையில், தேனியைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வருகையையொட்டி, அவரை வரவேற்கும் விதமாக அவரது புகைப்படத்தையும், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும் தர்பூசணி பழத்தில் செதுக்கியுள்ளார். அதன் கீழே ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் "இந்தியாவுக்கு வருக" என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.