சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை நிர்வாகிகள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில், சென்னையில் ஈசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலையில் நிகழும் விபத்துகளில் சிக்குவோரை பெரும்பாக்கத்தில் உள்ள அந்த புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு, அதன் நிர்வாகிகள் பேரம் பேசினர்.
இந்த ஆடியோ குறித்து முதற்கட்ட விசாரணையில், குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால், அந்த மருத்துவமனையை முதல்வர் காப்பீடு திட்டத்தில் இருந்து நீக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், 108 ஆம்புலன்ஸின் தற்காலிக ஓட்டுநர்கள் 10 பேரை பணி நீக்கமும், நிரந்தர ஓட்டுநர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டது.
பொதுவாக 108 ஆம்புலன்ஸ்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குத்தான் நோயாளிகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், விபத்தில் சிக்குவோரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரச் சொல்வதில், வெறும் முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்டம் மட்டும்தான் பின்னணியில் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.
சில தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் சிக்கியவர்களை மூளைச் சாவு அடைந்ததாகக் கூறி அவர்களது உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாருக்கும், இதுபோன்ற பேரங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்றும் விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்படுகிறது.