சென்னை: நீட் நுழைவுத் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்து ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், தமிழகத்தில் இதுவரை 4 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிற மாநிலங்களிலும் தேர்வு எழுதியுள்ளனர். சிலர் ஆள்மாறாட்டம் செய்து வெளி மாநிலங்களில் தேர்வெழுதியிருக்கிறார்கள். இந்தவிவகாரத்தில் இதுவரை 19 பேர் மீது சந்தேக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், இது வெறும் மாநில அளவில் நடந்த முறைகேடு அல்ல, தேசிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்த வழக்கி ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
மேலும், நடப்புக் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் சேர்ந்த 4,250 மாணவ, மாணவிகளின் கைரேகைகளைப் பதிவு செய்து சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இது குறித்து உத்தரவிட்ட போது நீதிபதிகள் கூறியதாவது, தேர்வெழுதும் முன்பு ஆடை, தலைமுடி என பல கெடுபிடிகளை செய்து சோதனை செய்தார்களே? முகத்தை சோதனை செய்யாமல் விட்டுவிட்டார்களே? என்று கேள்வி எழுப்பியதோடு, இனி, நீட் தேர்வின் போது கைரேகை மட்டுமல்லாமல் முகத்தை பதிவு செய்யும் வகையில் கருவிகளை பொருத்த வேண்டும் என்றும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.