இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அறிவிப்பு
தமிழகத்தில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், 2019-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் முதல்வர் தலைமையில் 23.9.2019 அன்று நடைபெற்றது. இன்றிலிருந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கிய காரணத்தினால், அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று, மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், செம்பாட்டூர் கிராமத்தில் 15.10.2019 அன்று இடி தாக்கியதில், குளத்தூர் வட்டம், வைத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எத்திரால் என்பவரின் மனைவி சாந்தி, ஆறுமுகம் மனைவி விஜயா, ராமச்சந்திரன் மனைவி கலைச்செல்வி மற்றும் லெட்சுமணன் மனைவி லட்சுமியம்மாள் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டம், க.எறையசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சோக்கையா என்பவரின் மகன் வேலு என்பவர் 15.10.2019 அன்று மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், நசரத்பேட்டை கிராமத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த களியனூர் கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பவரின் மகன் கோபி மின்னல் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து முதல்வர் வேதனை அடைந்தார்.
இடி, மின்னல் காரணமாக உயிரிழந்த மேற்கண்ட ஆறு நபர்களின் குடும்பங்களுக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.