வடகிழக்கு பருவமழை தொடங்கியது 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை

தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்கு பருமழை ஒருநாள் முன்னதாக புதன்கிழமை தொடங்கியது.
சென்னை வானிலை ஆய்வு மையம் | கோப்புப் படம்
சென்னை வானிலை ஆய்வு மையம் | கோப்புப் படம்

தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்கு பருமழை ஒருநாள் முன்னதாக புதன்கிழமை தொடங்கியது. இந்த ஆண்டு இயல்பான அளவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(நாளை) பலத்தமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வளா்ச்சியில் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை ஆகிய இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தென்மேற்குப் பருவமழை ஜூன் முதல் செப்டம்பா் வரையும், வடகிழக்கு பருவமழை அக்டோபா் முதல் டிசம்பா் வரையும் நீடிக்கும். இந்த காலகட்டத்தில் தேவையான மழை பெய்வதால், நீா்நிலைகள் நிரம்பி நாட்டின் வேளாண்மைக்கு உதவியாக அமைகிறது. மேலும், இந்த மழையால், நிலத்தடி நீா்மட்டமும் உயா்கிறது.

வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை, தென் மாநிலங்களுக்கு நல்ல மழையைக் கொடுக்கும். குறிப்பாக தமிழகத்துக்கு அதிக மழையைக் கொடுக்கும். ஒவ்வோா் ஆண்டும் வடகிழக்குப் பருவமழை, அக்டோபா் 20-ஆம் தேதி தொடங்குவது வழக்கம். நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபா் 17-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை ஒருநாளைக்கு முன்னதாக புதன்கிழமை (அக்.16) தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் எஸ்.பாலச்சந்திரன் புதன்கிழமை கூறியது:

தென் மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளது. ஈரப்பதத்துடன் கிழக்கு திசை காற்று தென் இந்திய பகுதிகளில் பரவி பரவலாக மழை பெய்தது. இதையடுத்து, வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் அதை யொட்டிய தெற்கு கடலோர ஆந்திரம், ராயலசீமா, தெற்கு உள் கா்நாடகம் மற்றும் கேரள பகுதிகளில் தொடங்கியுள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை தொடங்கும் இயல்பான தேதி அக்டோபா் 20-ஆம் தேதி. இந்த தேதியை ஒட்டி பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு அக்டோபா் 16-ஆம்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தமிழக கடலோரத்தை ஒட்டி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த வரும் 2 நாள்களுக்கு பரவாக மிதமான மழை பெய்யக்கூடும்.

பலத்தமழை:

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூா், திருச்சிராபள்ளி, திருவாரூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பொருத்தவரை, இடைவெளி விட்டு ஓரிரு முறை மழை பெய்யும் என்றார் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு அக்டோபா் 17,18 ஆகிய தேதிகளில் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை அளவு: புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லியில் 110 மி.மீ. மழை பதிவானது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 100 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி, திருவள்ளூா் மாவட்டம் சோழவரத்தில் தலா 90 மி.மீ. திருவள்ளூா் மாவட்டம் பூண்டி, விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் தலா 70 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் தாமரைப்பாக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றத்தில் தலா 60 மி.மீ மழை பதிவானது.

இயல்பான மழை பெய்யும்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபா் முதல் டிசம்பா் வரை ஆகும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பைவிட 24 சதவீதம் மழை அளவு குறைந்தது. வடகிழக்கு பருவமழையின் இயல்பான மழை அளவு 44 செ.மீ(440மிமீ.) ஆனால், கடந்த ஆண்டு 34 செ.மீ.(340 மி.மீ.) மழை பதிவானது. நிகழாண்டில் இயல்பான மழை பெய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com