மதுரை: நான்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
நான்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் சங்கர சுப்ரமணி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் வரும் 21-ஆம் தேதியன்று நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அதேசமயம் நான்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த ரூ2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, பணம் விநியோகித்தவர்களை பொதுமக்களே பிடித்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நான்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல் செய்திருந்தார்.
சுயேச்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில் நான்குநேரி தொகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.2,000 வழங்க முடிவு செய்துள்ளனர் என்றும், எனவே நான்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவரது மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இடைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.