சென்னை: வடகிழக்குப் பருவ மழை காரணமாக தமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன், அடுத்த வாரம் மழை நிலவரம் குறித்து ஒரு சிறிய குறிப்பை எடுத்துப் பதிவு செய்துள்ளார்.
அது சற்று கலக்கமாக இருந்தாலும், தண்ணீர் பஞ்சத்தால் அல்லாடிய சென்னைவாசிகள், பருவ மழையை வருக வருக என வரவேற்கவே செய்வார்கள் என்று நம்புவோம்.
தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, இந்த வடகிழக்குப் பருவ மழையைப் பற்றி ஒரே ஒரு விஷயத்தை நிச்சயம் சொல்ல வேண்டும். சென்னை மற்றும் தமிழகத்தில் இந்த வடகிழக்குப் பருவ மழை நிச்சயம் வழக்கமான அளவை விட கூடுதலாகவே இருக்கும்.
இதுவரை பார்த்திராத வகையில் வானிலை மாற்றம் அமைந்துள்ளது. ஒவ்வொரு மழையும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. இது அனைத்துமே 2019 வடகிழக்குப் பருவ மழை நிச்சயம் நினைவில் கொள்ளத்தக்கதாக அமையும் என்றுதான் சொல்கிறது.
அதோடு, இந்த வடகிழக்குப் பருவ மழை முடிவதற்குள் சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளும் நிச்சயம் நிரம்பிவிடும்.
அதே சமயம், அடுத்த வாரம்.. சென்னையில் ஒரு சில கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.