சென்னை: கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ந்து காலையிலும், இரவிலும் மழையோடு தொடங்கி, மழையோடு முடிந்த நிலையில், இன்று காலை வழக்கமான ஒரு நாளாக இருந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, இன்று ஒரு நாள் மழை நின்று சுளீர் வெயிலை எதிர்பார்க்கலாம். கடந்த சில நாட்களாக துவைத்த துணிகளை எல்லாம் இன்று காய வைத்துக் கொள்ளலாம்.
நேற்று முன்தினம் இரவு முழுக்க மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு சென்னையில் முழு நாளும் மழைப் பெய்து கொண்டிருந்த ஒரு நாளாக நேற்று அமைந்திருந்தது. நீலகிரி மாவட்டம் முழுக்க மழையால் குளிர்ந்தது.
சென்னையில் இனி இரவில் தொடங்கி காலை வரை தொடரும் மழை நாட்களை எதிர்பார்க்கலாம். இனி வரும் நாட்களில் பகல் நேரத்தில் மழை பெய்வது சற்று குறையும் அல்லது இருக்கவே இருக்காது.
தமிழகத்தின் மேற்கு உள் மாவட்டங்களிலும், தெற்கு மாவட்டங்களிலும் இனி சிறப்பான மழை நாட்களாகவே அமையும். தமிழகம் மிகச் சிறப்பான வடகிழக்குப் பருவ மழையை காணும் நாட்களாக வரும் நாட்கள் அமையும்.
சென்னையில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவானது..
அயனாவரம் - 13 செ.மீ.
பெரம்பூர் - 11
அம்பத்தூர் - 6 செ.மீ.
பொன்னேரி - 2 செ.மீ.
திருத்தணி - 1 செ.மீ.
கிண்டி - 3 செ.மீ.
தண்டையார்பேட்டை - 2 செ.மீ என்று பதிவிட்டுள்ளார்.