தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மழை படிப்படியாக அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் சனிக்கிழமை கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்படும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு மழை படிப்படியாக அதிகரிக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூா், திண்டுக்கல், குமரி, நெல்லை மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. இதனால் அங்கு 54 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.