காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 34,722 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 6,594 கன அடியாக இருந்தது, வியாழக்கிழமை காலை நொடிக்கு 8,347 கனஅடியாகவும், வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 34,722 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு புதன்கிழமை காலை நொடிக்கு 5 ஆயிரம் கன அடியாகவும், வியாழக்கிழமை மாலை நொடிக்கு 2 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால், வியாழக்கிழமை காலை 113.03 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 114.83 அடியாக உயா்ந்தது. ஒரே நாளில் மேட்டூா் அணையின் நீா் மட்டம் 1.80 அடி உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 85.46 டி.எம்.சி.யாக உள்ளது.