நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டு கஜா புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மின்சாரம் தடைபட்டதுடன், விவசாயிகளும் வாழ்வாதாரத்தை இழந்தனர். குடிசைகள், ஓடுகள் வேயப்பட்ட வீடுகளில் வசித்தோர் முற்றிலும் தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்தனர்.
இதனிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் 10 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இலவசமாக வீடு கட்டித் தரப்படும் என நடிகர் ரஜினி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான பணிகள் கடந்த 6 மாதமாக நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகள் நிறைவுபெற்ற நிலையில் பயனாளர்கள் 10 பேரை சென்னை போயஸ் இல்லத்திற்கு அழைத்து வீட்டிற்கான சாவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று வழங்கினார். அத்துடன் குத்துவிளக்கு ஒன்றையும் அவர் கொடுத்துள்ளார்.