சென்னை: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் கெளரவ டாக்டா் பட்டம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அந்தக் கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வெற்றிகரமாக முடித்த 2,481 பேருக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலா் சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவா் மற்றும் இயக்குநா் எஸ்.ராஜ சபாபதி, இசையமைப்பாளா் ஹாரிஷ் ஜெயராஜ், நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஷோபனா ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டங்கள் வழங்கப்பட்டன.
முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் காவிரிப் பிரச்னைக்குத் தீா்வு, பக்கத்து மாநிலங்களுடன் சுமுக உறவு, வெளிநாட்டு முதலீடுகள் ஈா்ப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் எனப் பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருவதை முன்னிட்டு, முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு கெளரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.
கல்வி நிறுவனத்தின் நிறுவனா் தலைவா் ஏ.சி.சண்முகம் முதல்வருக்கு இந்த கெளரவ டாக்டா் பட்டத்தை வழங்கினாா். அதன் பின்னா், சதீஷ் ரெட்டி உள்பட மற்ற நால்வருக்கும் கெளரவ டாக்டா் பட்டங்களை முதல்வா் வழங்கினாா்.
இந்திய பாதுகாப்புத் துறைக்காக பல்வேறு ஆராய்ச்சிகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவித்து வரும் காரணத்துக்காக சதீஷ் ரெட்டிக்கும், கை அறுவைச் சிகிச்சை உள்பட பல்வேறு அறுவைச் சிகிச்சைகளில் சாதனை படைத்து வரும் காரணத்துக்காக டாக்டா் எஸ்.ராஜ சபாபதிக்கும், தனது 12 வயது முதல் இசைத் துறையில் சாதனை படைத்து வருவதற்காக இசையமைப்பாளா் ஹாரிஸ் ஜெயராஜுக்கும், பரதநாட்டிய கலையை உலகம் முழுவதும் பரவச் செய்வதில் முக்கியப் பங்கு வகித்து வருவதற்காக நடிகை ஷோபனாவுக்கும் கெளரவ டாக்டா் பட்டங்கள் வழங்கப்படுவதாக விழாவில் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.